சிங்கப்பூரின் நிதித் துறை அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2018ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது, வரவு - செலவுக்கு போக சிங்கப்பூர் கஜானாவில் மீதமிருக்கும் தொகையை மக்களுக்கு போனஸ் என்ற வகையில் வழங்க இருப்பதாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார்.
வழக்கமாக நம் நாட்டில் பட்ஜெட் தாக்கலின் போது நிதிப் பற்றாக்குறை என்ற ஒற்றை வார்த்தை இல்லாமல் உரை முடியாது. ஆனால், சிங்கப்பூரில், வரவுக்கும் செலவுக்கும் போக சிங்கப்பூர் அரசு கஜானாவில் கணிசமாக ஒரு தொகை இருப்பதாகவும், அதனை மக்களுக்கு போனஸாக வழங்க இருப்பதாகவும் அறிவித்திருப்பதன் மூலம் பல நாடுகளுக்கும் முன்னுதாரணமாக சிங்கப்பூர் மாறியுள்ளது.
அந்த வகையில் சிங்கப்பூரில் வசிக்கும் 21 வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் 300 சிங்கப்பூர் டாலர்கள் போனஸாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அரசின் பட்ஜெட்டில் சுமார் 10 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மிச்சமிருப்பதால், அவற்றை நாட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நிதித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைத்த சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு, மேம்பாட்டின் மூலம் கிடைத்த பயனை பங்கிட்டு அளிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கீட் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் 100 சிங்கப்பூர் டாலர் முதல் 300 சிங்கப்பூர் டாலர் வரை அவர்களது வருவாய்க்கு ஏற்ற வகையில் போனஸாகப் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.