ரியாத்: ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 'சவுதி அரேபியா விஷன் 2030' என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
அந்த திட்டத்தின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனுமதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக்கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா, அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் முதல்நிலை வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி நாட்டின் பொருளாதாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.