உலகம் முழுவதும் 2018-ம் ஆண்டை வரேவற்கும் விதமாக மக்கள் அனைவரும் வானவேடிக்கைகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாரிக்கொண்டனர்.
முன்பெல்லாம் இதற்காக வாழ்த்து அட்டைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களின் வழியாக வாழ்த்துகளை பரிமாரிக்கொள்கின்றனர்.
பெரும்பாலும் ஃபோன் செய்து வாழ்த்து கூறினாலும், அதில் உள்ள சமூக வலைதளங்களில் மூலமாகவே பல விதமான வாழ்த்துச் செய்திகளின் பரிமாற்றமே இதில் முதலிடம் பிடித்தது. இவற்றில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்றவை உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களாகும்.
இந்நிலையில், 2018 புத்தாண்டின் பிறப்பு வாட்ஸ்ஆப்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியது. துவக்க நாளிலேயே (ஞாயிறு இரவு) அந்த ஆப் சுமார் 2 மணிநேரங்களுக்கு முடங்கியது. இதனால் அதன் பயனீட்டாளர்கள் மிகவும் கோபமடைந்தனர். தங்களின் வாழ்த்துகளையும், கொண்டாட்ட தொகுப்புகளையும் அனுப்ப முடியாமல் சிரமப்பட்டனர்.
குறிப்பாக இந்தியா, ஜப்பான், பிரிட்டன், பார்படாஸ், பணாமா, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்ஆப் முடங்கியதன் தாக்கம் பெரியளவில் உணரப்பட்டது.
முக்கிய வேளையில் வாட்ஸ்ஆப் முடங்கிய காரணத்தால் இதர சமூக வலைதள பக்கங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வாட்ஸ்ஆப் டௌன் என்ற ஹாஷ்டாக்குகளுடன் (#whatsappdown) விமரிசனங்கள் அனல் பறந்தன.
இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு 2,012 புகார்கள் சில நொடிகளில் குவிந்தன. வாட்ஸ்ஆப் வரலாற்றிலேயே அதிகப்படியான புகார்கள் குவிந்தது இதுவே முதன்முறையாகும்.
அதிகளவிலான பயன்பாட்டின் காரணமாகவே வாட்ஸ்ஆப் முடங்கியது என்றாலும், அந்நிறுவனம் தங்களின் தவறுக்கு மன்னிப்பு கோரியது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இருப்பினும், பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 உள்ளிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.