இஸ்லாமாபாத்: நிதி உதவி உள்ளிட்ட விஷயங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்ததன் காரணமாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹபீஸ் சயீத்தின் 'ஜமாத்-உத்-தவா' இயக்கத்தினை பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தனது மண்ணில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கிறது என்றும், ஏமாற்றி நிதி உதவி பெறுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுபற்றி அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தற்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அதன் முதல்கட்டமாக அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி வைத்தது. அத்துடன் 2017 நிதி ஆண்டுக்கான கூட்டணி ஆதரவு நிதியான 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) நிதி உதவியும் சேர்த்து நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களான ஜமாத்-உத்-தாவா மற்றும் பலாக்-இ-இசானியாத் பொதுமக்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான அரசு விளம்பரமானது பாகிஸ்தானில் வெளியாகும் செய்தி பத்திரிக்கைகளில் உருது மற்றும் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஹபீஸ் சயீத் இயக்கங்கள் உள்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குபவர்கள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்க்கொள்ள வேண்டும், கடுமையான அபராதம் விதிக்கப்படும் மற்றும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜமாத்-உத்-தாவா, பலாக்-இ-இசானியாத், லஷ்கர்-இ-தொய்பா, மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 72 இயக்கங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.