ராணுவ ஒத்துழைப்பை மீண்டும் புதுப்பிக்குமாறு அமெரிக்காவிடம் கோரப் போவதில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவத் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்மையில் முன்வைத்திருந்தார். அவற்றில் குறிப்பாக, பயங்கரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாறாக அவர்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் அவர் சாடியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டுக்கான நிதியுதவியை நிறுத்தி வைப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம், பயங்கரவாத ஒழிப்பில் இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த ராணுவ ஒத்துழைப்பு முடிவுக்கு வந்தது.
மேலும், பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக 3,300 கோடி டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) மூடத்தனமாக அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் டிரம்ப் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவத் பாஜ்வா வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதத்தையும், அதில் தொடர்புடையவர்களையும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்கா வெளியிட்ட கருத்துகள் அவற்றை இழிவுபடுத்தும் வகையில் உள்ளன.
ராணுவ உதவியை மீண்டும் அளிக்குமாறு அந்நாட்டிடம் வலியுறுத்தப் போவதில்லை. அதேவேளையில் அமெரிக்காவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தான் புரிந்த தியாகத்துக்கும், பங்களிப்புக்கும் முறையான அங்கீகாரம் அளியுங்கள் என்பது மட்டும்தான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.