பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாகக் கூறி, அந்நாட்டுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்து விட்டது. இந்நிலையில், அமெரிக்க பொது விவகாரங்கள் துறையின் துணை அமைச்சர் ஸ்டீவன் கோல்ட்ஸ்டெயின், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், வேறு எந்த நோக்கத்துக்காகவும் அந்த நிதி மறுஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்த நேரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கையை பாகிஸ்தான் தரப்புதான் தொடங்க வேண்டும். அவர்கள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் தரப்பு முன்வர வேண்டும்.
ஏற்கெனவே அளித்த வாக்குறுதிக்கு மரியாதை சேர்க்கும் வகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.