ராணுவம் மற்றும் உளவுத் துறை ரீதியிலான ஒத்துழைப்பை நிறுத்துவது தொடர்பாக, பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ராணுவம் மற்றும் உளவுத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இது தொடர்பாக, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு, "பாகிஸ்தான் அரசைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று அவர் பதிலளித்தார்.
இதேபோல், உளவுத் துறை ரீதியிலான ஒத்துழைப்பை பாகிஸ்தான் நிறுத்தி விட்டதா? என்று அமெரிக்க உளவுத் துறை (சிஐஏ) செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா பல முறை வலியுறுத்தியது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், நிதியுதவியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.
அமெரிக்க அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹஃபீஸ் சயீது மற்றும் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "அரசின் கொள்கைப் படி, தனிப்பட்ட எந்தவொரு பயங்கரவாத அமைப்பு பற்றியும், பாகிஸ்தானுடன் அமெரிக்க அரசு விவாதிக்கவில்லை' என்றார் அவர்.