வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 8.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாக் பகுதியில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்டான சேதங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கு தேசிய வானிலை சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.