சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஹிந்தியில் தனது உரையை ஆற்றிய மோடி, உலக நாடுகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த மாநாடு தீர்வாக அமையும். தற்போதைய நவீன உலகில் தொழில்நுட்பமும் இணையமும் சக்திவாய்ந்த காரணிகளாக விளங்குகின்றன.
கடந்த 1997ம் ஆண்டு நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த தேவேகௌடா பங்கேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 மடங்காக உயர்ந்துள்ளது.
அணு ஆயுத பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அமைதியை நிலைநாட்டுவது, ஸ்திரத்தன்மையை பேணுவது போன்றவை உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது.
டிஜிட்டல்மயம், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நவீன யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. தகவல் மேலாண்மை சார்ந்தே எதிர்காலம் அடங்கியுள்ளது. தொழில்நுட்பத்தால் வாழ்க்கை முறை மாறியுள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியா எப்போதுமே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் மோடி கூறினார்.