பழிக்குப் பழி'' என்ற முறையில் இறக்குமதி வரி விதிப்பை மேற்கொண்டால், இரு பெரும் பொருளாதார வல்லரசுகளான சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வர்த்தகத் துறை இணையமைச்சர் லீ செங்காங் கூறியதாவது: சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே பரஸ்பரம் பெரிய அளவில் இறக்குமதி வரியை விதித்து வருமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அழிவைச் சந்திக்கும்.
அமெரிக்காவின் கொள்கை என்பது, சர்வதேச பொருளாதார மயமாக்கல் நடவடிக்கையில் தலையிடுவதாக உள்ளது. இதனால், உலக வர்த்தக நடவடிக்கையின் இயல்பு பாதிக்கப்படும்.
இரு பொருளாதார வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக சர்வதேச வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வர்த்தகப் போரில் வெற்றியாளர் இருக்க முடியாது. அந்த வகையில், இரு நாடுகளின் நிறுவனங்களுமே இழப்புகளை சந்திக்கும். சீனா, அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றார் அவர்.