அருங்காட்சியகமாகிறது சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை

தாய்லாந்தில் 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 17 நாள்களாக சிக்கித் தவித்த மலைக் குகையை அருங்காட்சியமாக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
குகைக்குள் சிக்கிய சிறுவரை மீட்டுக் கொண்டு வரும் மீட்புக் குழுவினர் (கோப்புப் படம்).
குகைக்குள் சிக்கிய சிறுவரை மீட்டுக் கொண்டு வரும் மீட்புக் குழுவினர் (கோப்புப் படம்).

தாய்லாந்தில் 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 17 நாள்களாக சிக்கித் தவித்த மலைக் குகையை அருங்காட்சியமாக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஆபத்துகள் நிறைந்த, நீரில் முழ்கிய மிகக் குறுகலான குகைப் பாதைகளில் மிகக் கடுமையாகப் போராடி அந்த 13 பேரையும் மீட்டுக் கொண்டு வந்த மீட்புக் குழுவினரை கெளரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்படவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்தது.

அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.

எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில்அந்த 13 பேரையும் 9 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார்.

பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து கடல் அதிரடிப் படை முன்னாள் வீரர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, குகைக்குள் மேலும் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும், குகைக்குள் பிராண வாயு (ஆக்ஸிஜன்) அளவும் வெகுவாகக் குறைந்து வந்தது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற மிகக் கடுமையான மீட்புப் பணிகளில் அந்த 13 பேரும் படிப்படியாக குகைக்குள்ளிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.

வெள்ள நீரில் மூழ்கிய மிகக் குறுகலான பாதைகள் வழியாக, தங்கள் உயிரை பணயம் வைத்து சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் மீட்டு வந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில், சிறுவர்களை மீட்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மீட்பு முகாம்கள் வியாழக்கிழமை பிரிக்கப்பட்டன. 

இந்தச் சூழலில், மீட்புக் குழுவினரின் தியாகத்தையும், தீரத்தையும் கௌரவிக்கும் வகையில் அந்தப் பகுதியை அருங்காட்சியமாக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com