சிறையில் "பி-பிரிவு' வசதிகளை மறுத்த மரியம் நவாஸ்
பனாமா ஆவண ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் (44), சிறையில் தனக்கு அதிகாரிகள் அளிக்க முன்வந்த "பி-பிரிவு' வசதிகளை மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் சிறைகளில் "பி-பிரிவு'க்கு தகுதியுடையவர்கள் தங்கள் சொந்த செலவில் மெத்தை, மேஜை, நாற்காலி, மின் விசிறி, தொலைக்காட்சி, செய்தித் தாள்கள் ஆகிய வசதிகளைப் பெற முடியும். எனினும், அந்த வசதிகளை சிறை அதிகாரிகள் அளிக்க முன்வந்ததாகவும், அதனை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தாமாகவே மறுத்துவிட்டதாகவும் மரியம் நவாஸ் கைப்பட எழுதிக் கொடுத்துள்ள கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எனினும், இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தந்தை நவாஸ் ஷெரீஃப் மற்றும் கணவர் முகமது சஃப்தார் ஆகியோர் "பி-பிரிவு' வசதிகளை விண்ணப்பித்துப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் என்ற முறையில் நவாஸ் ஷெரீஃப் "ஏ-பிரிவு' வசதிகளையும், முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் எம்.பி. என்ற முறையில் முகமது சஃப்தார் "பி-பிரிவு' வசதிகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
"அடிப்படை வசதிகள் இல்லை': முன்னதாக, நவாஸ் ஷெரீஃப் அடைக்கப்பட்டுள்ள அடிலாலா சிறையில் அவருக்கு படுக்கை உள்ளிட்ட அடிப்படை அளிக்கப்படவில்லை எனவும், கழிவறை சுத்தம் செய்யப்படவில்லை எனவும் அவரது மகன் ஹுசைன் நவாஸ் ஷெரீஃப் புகார் தெரிவித்திருந்தார்.