அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போர் முடிவடைந்ததாக ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு அதிபர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது புதின் பேசியதாவது,
அணு ஆயுதங்களில் நாங்கள் இருவரும் முக்கியமானவர்கள் என்பதால உலக அமைதியை பாதுகாப்பதில் எங்களுக்கு முக்கியமான பொறுப்பு உள்ளது. இதனை ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையாக கருதுகிறோம். அமெரிக்காவுடனான பனிப்போர் முடிவுக்கு வந்தது.
அதிபர் டிரம்ப்புடனான உரையாடல் நன்றாக இருந்தது. நாங்கள் இருவரும் தற்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டோம். அதற்காக, டொனால்டுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.
நிச்சயம், நிறைய சவால்கள் உள்ளன. அனைத்தையும் எங்களால் சரிசெய்துவிட முடியாது. ஆனால், நாங்கள் தற்போது முதல் அடியை எடுத்துவைத்துள்ளோம்" என்றார்.
இதையடுத்து, டிரம்ப் பேசியதாவது,
"சிரியாவில் உள்ள நெருக்கடி மிகவும் சிக்கலான ஒன்று. ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் திறன் எங்கள் இருநாடுகளின் ஒத்துழைப்பில் தான் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான எங்களது வெற்றியை ஈரான் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா நிச்சயம் அனுமதிக்காது என்பதில் உறுதியாக உள்ளேன்" என்றார்.
உலகக்கோப்பை கால்பந்து ரஷியாவில் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. 2026-இல் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதனை குறிக்கும் வகையில் புதின் கால்பந்தை டிரம்ப்பிடம் வழங்கினார்.