பாகிஸ்தானில் ஹஃபீஸ் சயீது கட்சிக்கு முகநூலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஹஃபீஸ் சயீதின் மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரின் முகநூல் கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் -உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் அரசியல் வாழ்க்கைக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸýகர்பெர்க் கூறியதாவது:
முகநூல் சமூக வலைதளம் நேர்மறையான பிரசாரங்களுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவதே எங்களின் முதன்மையான குறிக்கோள். அதேசமயம், பாகிஸ்தான், இந்தியா,பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட இதர நாடுகளில் வரவிருக்கும் தேர்தல்களில் குறுக்கீடுவதை தவிர்ப்பதையே விரும்புகிறோம் என்றார் அவர்.
பாகிஸ்தான் தேர்தலையொட்டி முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போலி பக்கங்களை கண்டறிந்து அவற்றினை அகற்றிட, தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினரின் உதவியை ஃபேஸ்புக் அதிகாரிகள் அண்மையில் கோரியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மில்லி முஸ்ஸீம் லீக்கை பாகிஸ்தான் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.