விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் முடிவில், ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போய் விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து, போரின்போது காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, காணாமல் போனவர்களின் அலுவலகம் என்ற பெயரில் புதிய அமைப்பை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் சலியா பெரீஸ், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு அண்மையில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டனர்.
இதையடுத்து, சுட்டுரையில் பெரீஸ் வெளியிட்டுள்ள பதிவில், "போரின் முடிவில் ராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனது தொடர்பான புகார்களை விசாரிக்க தயாராக உள்ளோம். இந்த விசாரணையானது, பாரபட்சமில்லாமலும், அறிவியல் ரீதியிலும் இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.