தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் ஆப்கன் போரில், தலிபான் பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை முதல் முறையாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:
ஆப்கன் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்படுத்தப்படுவதை ஊக்கப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
இதற்காக, தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
புனித ரமலான் மாதத்தையொட்டி தலிபான் பயங்கரவாதிகளுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக ஆப்கன் அரசு கடந்த மாதம் அறிவித்தது.
அதனை ஏற்று, அரசுப் படைகள் மீதான தாக்குதலை 3 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டின் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு, ரமலானையொட்டி ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முதல் சண்டை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், தலிபான்களுடனான சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கும் ஆப்கன் அரசின் அறிவிப்பை ஏற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர். அதையடுத்து, ஆப்கன் ராணுவமும் தலிபான்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியது.
தலிபான்களைப் பொருத்தவரை ஆப்கன் அரசு மூலம் பேசுவதைவிட, அமெரிக்கா தங்களிடம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.