நவாஸ், மரியம் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன்
நவாஸ், மரியம் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் ஜூலை இறுதி வாரம் வரை ஒத்திவைத்தது.
இதையடுத்து, அந்த நாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக்குள் அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பனாமா ஆவண முறைகேடு வழக்குகளின் ஒன்றான லண்டன் அவென்ஃபீல்டு குடியிருப்புகள் வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ராவல்பிண்டியிலுள்ள அடிலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த இருவரின் சார்பில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மொஷின் அக்தார் கயானி மற்றும் மியாங்குல் ஹஸன் ஒளரங்கசீப் ஆகியோர் அடங்கி அமர்வு, அந்த மனு மீதான விசாரணையை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.
அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித் தனியாக 3 வழக்குகளில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்ப்பட்டது.
அதையடுத்து, முகமது சஃப்தார் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், லண்டனிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை லாகூர் திரும்பிய நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் உடனடியாக கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனை விதித்த நீதிபதி திடீர் விலகல்


அவென்ஃபீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு சிறைத் தண்டனை விதித்த இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பஷீர், பனாமா முறைகேடு தொடர்பான மற்ற இரு ஊழல் வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், நவாஸ் ஷெரீஃப் மீது நிலுவையில் உள்ள அல்-அஜீஸா இரும்பு ஆலை மற்றும் ஃபிளாக்ஷிப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஊழல் வழக்குகளை வேறு நீதிபதிகளுக்கு மாற்றித் தரும்படி அவர் கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவாஸ் ஷெரீஃபுக்கு எதிரான ஊழல் வழக்குகளை நீதிபதி முகமது பஷீர் விசாரிப்பதற்கு, நவாஸ் தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com