ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அவர்களை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் அடைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டி அடியாலா சிறையில், அவர்களுக்கு எதிராக மற்ற கைதிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனால், அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனவே, அந்த இருவரையும் அடிலாலா சிறையில் இருந்து சிஹாலா விருந்தினர் மாளிகைக்கு மாற்றுவது குறித்து திட்டமிடப்படுகிறது.
அந்த மாளிகை, தற்போது கிளைச் சிறைச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.
அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
இதுதொடர்பாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்ப்பட்டது.
அதையடுத்து, அந்த மூவரும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.