பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் மருமகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனாமா ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப், பிஎம்எல்-என் கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மருமகள் சைனாப்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வந்தபோது லாஹூரில் உள்ள வாக்குச் சாவடியில் இடம்பெற்றுள்ள வாக்காளர் பட்டியலில் சைனாப் பெயர் இடம்பெறவில்லை. அங்கு கடந்த முறை ஆட்சியில் இருந்த பிரதான கட்சியின் பிரதமர் வேட்பாளரின் மருமகள் பெயர் அவருடைய சொந்த வாக்குச் சாவடியிலேயே இடம்பெறாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.