இஸ்லாமாபாத்: பொதுத்தேர்தலில் வாக்கினை வெளிப்படையாகப் பதிவு செய்தது ஏன் என்று தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.
இந்நிலையில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது இம்ரான் கான் தான் வாக்களிக்கும் சமயம் அதை ஊடகங்கள் பதிவு செய்யும் விதமான வகையில் செயல்பட்டுள்ளார். அத்துடன் வாக்களித்து விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பொதுத்தேர்தலில் வாக்கினை வெளிப்படையாகப் பதிவு செய்தது ஏன் என்று தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, இந்த விசாரணையானது ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் கானின் வழக்கறிஞரான பாபர் அவான் திங்கள் காலை தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி, விளக்கமளித்தார். அவரது வாதங்களைக் கேட்ட பிறகு, பொதுத்தேர்தலில் வாக்கினை வெளிப்படையாகப் பதிவு செய்தது ஏன் என்று எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை முறைகளுக்கு எதிராக ரகசியத் தன்மைக்கு மாறாக நடந்து கொண்டது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.