இஸ்லாமாபாத்: தன் மீதான வழக்கில் ஆஜராவதற்கு எந்த வழக்கறிஞரும் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது புயலைக் கிளப்பியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரிப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
அதேசமயம் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நடந்து வருகிறது.
இந்நிலையில் தன் மீதான வழக்கில் ஆஜராவதற்கு எந்த வழக்கறிஞரும் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துளார்.
அவர் மீதான வழக்கினை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஒரு மாதத்துக்குள் வழக்கினை தன்னால் முடிக்க முடியாது என்று கூறி நவாஸ் ஷெரிப்பின் வழக்கறிஞர் கவாஜா ஹரிஸ் இந்த வழக்கிlலிருந்து விலகிக் கொண்டார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரிப், 'இந்த வழக்கில் எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு காரணமாக தற்பொழுது எந்த வழக்கறிஞரும் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை' என்று தெரிவித்துள்ளார். .