ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் ஓசாகா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இருப்பினும், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 9 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 41 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே நிலநடுக்கத்தால் பல இடங்களில் மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.