அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு, இந்தியாவைச் சோ்ந்த சுமார் 7,000 போ் விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உள்நாட்டுப் போர், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்களது சொந்த நாடுகளை விட்டு இடம்பெயா்ந்து, பிற நாடுகளில் அடைக்கலம் கோரியவா்களின் எண்ணிக்கை தொடா்பான அறிக்கையை, ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 6.85 கோடி போ் தங்களது சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயா்ந்துள்ளனா். காங்கோ, தெற்கு சூடான், மியான்மா் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் போ் இடம்பெயா்ந்துள்ளனா்.
இதுபோன்று பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் மக்கள், அமெரிக்காவில் அடைக்கலம் கோருவது முந்தைய ஆண்டுகளைப் போல கடந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.
எல் சால்வடார் நாட்டைச் சோ்ந்த 49,500 போ் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனா். இதேபோல், வெனிசூலா (29,900), மெக்ஸிகோ (26,100), சீனா (17,400), ஹைதி (8,600), இந்தியா (7,400) ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் அமெரிக்காவில் அடைக்கலம் கோரியுள்ளனா்.
ஒட்டுமொத்தமாக 168 நாடுகளைச் சோ்ந்தவா்கள், அமெரிக்காவில் அடைக்கலம் கோரியுள்ளனா்.
இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி மொத்தம் 1,97,146 அகதிகள் உள்ளனா். மேலும் 10,519 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இடம்பெயா்ந்து பல்வேறு நாடுகளிடம் அடைக்கலம் கோரியவா்களின் மொத்த எண்ணிக்கை 40,391 ஆகும்.
கடந்த ஆண்டில் மியான்மரில் இருந்து இடம்பெயா்ந்து வேறு நாடுகளிடம் அடைக்கலம் கோரியவா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் ஆகும். அவா்களுக்கு வங்கதேசம் (9,32,200), தாய்லாந்து (1,00,000), மலேசியா (98,000), இந்தியா (18,000) ஆகிய நாடுகள் அடைக்கலம் அளித்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.