மெலானியா ஆடையில் இடம்பெற்றிருந்த வாசகத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து அவரது கணவரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவில் அகதிகளின் குழந்தைகள் பிரிந்து வைக்கப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு நிலவியது. இதற்கு அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது இந்த நடைமுறையை நீக்கும் நிலைக்கு டொனால்டு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரிக்கப்பட்ட அகதிகளின் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா, நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரின் ஆடையில் இடம்பெற்றிருந்த வாசகத்தால் மீண்டும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதில், 'நான் எதுகுறித்தும் கவலைப்பட மாட்டேன், நீங்கள்?' ("I REALLY DON'T CARE, DO U?") என்றிருந்தது.
அகதிகளின் குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மெலானியா-வின் இந்த வாசகம் அனைவரின் மத்தியிலும் கண்டனங்களை குவித்தது. ஆனால், மெலானியா உடை விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கணவரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் களமிறங்கினார்.
அகதிகளின் குழந்தைகள் தங்கியிருந்த முகாமுக்கு செல்லும்போதும், மீண்டும் திரும்பும் போதும் பயண நேரத்தில் மட்டுமே அவர் அந்த ஆடையை அணிந்திருந்தார். அது தன்னைக் குறித்து தவறான மற்றும் போலியான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக அணிந்திருந்தார் என்று டொனால்டு டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.