வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் நாடுகளில் இராக், சவுதி அரேபியாவைத் தொடர்ந்து 3வது இடத்தில் ஈரான் இருக்கிறது.
சமீபத்தில் ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. பின்னர் உடனடியாக உலக அளவில் ஈரானை தனிமைப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். அத்துடன் ஈரானின் பொருளாதார வளத்தை முடக்கும் வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பை விடக் குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் மறைமுக விளைவாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டோம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
இருதரப்பு சந்திப்பின் போது இதுதொடர்பாக ஏற்கெனவே வலியுறுத்தபட்டுள்ளது. இனிமேலும் வலியுறுத்துவோம்.
பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன. அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடைகள் விதித்து, வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.