வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இதுபோன்ற மோசடிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக அமெரிக்க அரசுக்கு தகவல் கொடுத்திருக்கும் இந்திய தூதரகம், தொலைபேசி உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளது.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள், இந்தியர்களை தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, இந்திய தூதரகத்துக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண்களைப் பயன்படுத்திய மோசடியாளர்கள், இந்தியர்களை தொடர்பு கொண்டு அவர்களது கிரெடிட் கார்ட் எண் போன்ற சொந்தத் தகவல்களை திருடியிருக்கலாம். அல்லது, தங்களது பாஸ்போர்ட்டில் பிழை, விசா விண்ணப்பம் மற்றும் சில விண்ணப்பங்களில் பிழை இருப்பதாகவும், அதனை சரி செய்ய பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் சில இந்தியர்களுக்கு, இந்திய தூதரகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட முயன்றதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, இந்தியர்கள் அல்லது வெளிநாட்டினர் யாரையும் இந்திய தூதரகம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எந்த தகவலையும் கேட்டறியாது என்றும், மின்னஞ்சல் மூலமாகவே தொடர்பு கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய தூதரகத்தில் இருந்து பேசுவதாகக் கூறினால் அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.