பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான ஹஃபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம் லீக் கட்சி இம்மாதம் 23ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பு மீது நடவடிக்கை எடுக்குôமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து அந்த அமைப்பு மற்றும் ஹஃபீஸ் சயீதின் ஃபலா-இ-இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு சொந்தமான சொத்துகளை பாகிஸ்தான் அரசு பறிமுதல் செய்தது. அவற்றின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர் பொதுவெளியில் அதிகம் வராமல் ஒதுங்கியுள்ளார்.
இதனிடையே, ஹஃபீஸ் சயீது மில்லி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தன் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார்.
தனது கட்சியைப் பதிவு செய்வதற்காக ஹஃபீஸ் சயீது சமர்ப்பித்த மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அவரது கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு நிராகரித்தது.
எனவே ஹஃபீஸ் கட்சியின் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீண்டும் ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் சைஃபுல்லா கலீத், லாகூரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மில்லி முஸ்லிம் லீகை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு சட்ட ரீதியிலான தடை ஏதுமில்லை.
அடுத்ததாக நாங்கள் எங்கள் கட்சியின் முதல் நிறுவன நாளான மார்ச் 23-ஆம் தேதியன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.
எங்கள் கட்சியின் பதிவு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது பாகிஸ்தான் சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றியாகும். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு தேசிய அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப் பேரவைகளின் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
தேர்தல் செலவுகளை ஏற்பதோடு, தங்கள் தொகுதிகளில் வாக்கு வங்கியையும் கொண்டிருக்கும் நபர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்வோம் என்றார் அவர்.