பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வீடு அருகே புதன்கிழமை நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லாகூர் போலீஸார் கூறியதாவது:
லாகூரில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. அங்கு புதன்கிழமை சென்ற இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். சக்தி வாய்ந்த அந்த குண்டு வெடித்ததில் காவல் ஆய்வாளர்கள் இருவர், 3 காவலர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தோர் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் எவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.