இந்தோனேசியா
அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தரும் புதிய சட்டத்தை இந்தோனேசிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை இயற்றியது. உலகின் 3-ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சர் தலால் செளத்ரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. பனாமா ஆவண வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை அவர் விமர்சித்திருந்தார்.
செனெகல்
வட மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள செனெகல் நாட்டில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 6 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை இந்த விபத்து ஏற்பட்டபோது அந்த ஹெலிகாப்டரில் 20 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா
ஃபுளோரிடா மாகாண பள்ளித் தாக்குதலுக்குப் பிறகு, பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 17 பேர் உயிரிழக்கக் காரணமான அந்த பள்ளித் தாக்குதல் அமெரிக்காவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.