மாஸ்கோ: ரஷ்யாவில் ஒடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் இருந்து தங்கம் மற்றும் பிளாட்டின குவியல் மழையாகப் பொழிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் உள்ள விமான தளம் ஒன்றிலிருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. விமானம் ஒடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் தங்கம் மற்றும் பிளாட்டினக் கட்டிகள் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று ஓடுதளத்தில் விழுந்து சிதறியுள்ளது.
இது பற்றிய தகவல் விமானிக்கு தெரியப்படுத்தப்பட்டதும் விமானம் உடனடியாக அருகாமையில் உள்ள விமான நிலையம் ஒன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது .விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளதை அடுத்து குறிப்பிட்ட விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த விமானத்தில் அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும், ரஷ்யாவில் வைர உற்பத்திக்குப் பெயர் போன 'சிகோட்டா மைனிங் மற்றும் ஜியோலாஜிகல்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அந்த சரக்கு விமானத்தில் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட விபரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானம் பழுதானது தெரியாமல் விலைமதிப்பற்ற சரக்குகளை ஏற்ற அனுமதிக்கப்பட்டதா அல்லது இதன் பின்ணணியில் கொள்ளையர்கள் கைவரிசை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.