பீஜிங்: டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது என்று இந்திய தூதரின் கருத்துக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளது.
இந்திய சீன எல்லை பகுதியிலமைத்துள்ள பகுதி டோக்லாம். இப்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சிக்கு பூட்டான் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்து, சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புகள் 73 நாட்களாக நேருக்கு நேராக முகாமிட்டு மோதல் போக்கிலிருந்தனர். பின்னர் இரு நாட்டு அதிகாரிகள் கலந்து பேசி நிலைமை சரியானது. சீன துருப்புகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது என்று இந்திய தூதரின் கருத்துக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளது.
முன்னதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் கவுதம் பாம்பாவாலே சமீபத்தில் ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' என்னும் இதழுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்ற முயலும் எந்த ஓர் நடவடிக்கையும் மீண்டும் ஒரு மோதலைத்தான் உருவாக்கும். இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், ராணுவ பலத்தினை மேம்படும் பணிகளில் ஈடுபடலாம். ஆனால் டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமை பேணப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் பதிலளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறியதாவது:
எல்லைப் பகுதியினைப் பொறுத்தவரை அங்கு சமாதானம் நிலவ, நிலைத்தன்மை மேம்பட நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். டோக்லாம் எங்களது பகுதி. அதற்கு வரலாறு ரீதியான ஆதாரங்கள் உள்ளன. எனவே அங்கு சீனாவின் செயல்கள் என்பது எங்களது எல்லைக்கு உட்பட்ட ஒன்றுதான். டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது.
கடந்த வருட டோக்லாம் மோதலின் பொழுது எங்களது ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், தூதரக ரீதியிலான முயற்சிகள் மற்றும் தெளிவான சிந்தனையின் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த பிரச்னையை பேசசுவார்த்தை மூலம் தீர்ப்பது தொடர்பாக இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.