கெய்ரோ: கடந்த திங்கள் அன்று துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்ற எகிப்து அதிபர் தேர்தலில், 92 சதவீத வாக்குகள் பெற்று அல்-சிசி எகிப்து அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினைத் தொடர்ந்து அதிபராக இருந்த முகமது மோர்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த அல்-சிசி ஆட்சியைக் கைப்பற்றினார். தொடர்ந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அவரே அதிபராகத் தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் எகிப்தின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான 3 நாள் தேர்தல் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13,687 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை தொடங்கி, புதன் கிழமை வரை இந்த வாக்குப் பதிவுகள் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஒருதலைப்பட்சமாக நடைபெறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
அதிகமாக அறியப்படாத அரசியல்வாதியான மூஸா முஸ்தஃபா மூசா அதிபர் அல்-சிசியை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பெற்று அல்-சிசி எகிப்து அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மூஸா முஸ்தஃபா மூசா 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்த போதிலும் அதிகாரப்பூர்வ முடிவுகள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.