ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்தியர்களின் கருத்தரங்கம் விவேகானந்த் கலாசார அரங்கில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டார். அப்போது, நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, ஜப்பான் இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியா, ஜப்பான் இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த இருநாடுகளின் உறவு இப்போது மிகவும் நெருக்கமாக மேம்பட்டுள்ளது. இதற்கு இந்தியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் தான் முக்கியக் காரணம். இவர்களின் நட்பு தான் இந்த உறவு வலுப்பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார்.
முன்னதாக, மார்ச் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாக ஸ்வராஜ் ஜப்பான் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான 9-ஆவது திட்டக்குழுக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்றார். அப்போது ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாரோ கோனோவும் அதில் கலந்துகொண்டார்.
பின்னர் இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை நடக்கிறது. அப்போது, இரு நாடுகளின் உள்விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.