பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளரான மண்டேசர் அல்-ஸைதி அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 2008-ம் ஆண்டு டிசம்பரில் ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் இடையே ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ நோக்கி வீசினார்.
ஆனால் உடனடியாக கீழே குனிந்து புஷ் ஷூ தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசியதாக அல்-ஸைதி தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் தனது நன்னடத்தையின் காரணமாக 9 மாதங்களிலேயே சிறையிலிருந்து அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மண்டேசர் அல்-ஸைதி தற்பொழுது அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளேன்; ஊழல் அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவதே எனது இலக்கு. அப்போதுதான் நாடு முன்னேறும்' என்று தெரிவித்துள்ளார்.