ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு சட்ட விரோதமாக 131 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகளை மலேசியா போலீஸார் இடைமறித்தனர்.
இதுகுறித்து காவல் துறை தலைவர் முகமது ஃபுஸி ஹாரூண் கூறியதாவது:
சட்டவிரோதமாக இலங்கை அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகை மலேசியா போலீஸார் ஜோஹோர் மாகாண கடற்பகுதியில் இடைமறித்து சோதனை செய்தனர். அதில், 98 ஆண்கள், 24 பெண்கள், நான்கு சிறுவர்கள், ஐந்து சிறுமிகள் என மொத்தம் 131 பேர் இருந்தனர்.
அவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு கும்பல் ஏற்றிச் சென்றதாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற சோதனையின்போது, மூன்று இந்தோனேசியர்கள் மற்றும் நான்கு மலேசியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அகதிகளை கடத்தி சென்ற கும்பலுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஐந்து மலேசியர்களை பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.