மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர். இதைத்தொடர்ந்து அங்கு அவர்களுக்கான சிறப்பு அகதிகள் முகாம் ஏற்படுத்துவதாக வங்கதேச அரசு அறிவித்தது.
ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு உதவுவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் வங்கதேச அரசு, உலக வங்கியில் 500 மில்லியன் டாலர் நிதியுதவி கோரியது. இருப்பினும் அச்சமயம் இந்த கோரிக்கையை உலக வங்கி நிராகரித்தது. மேலும், அவ்வளவு பெரிய தொகையை நிதியுதவியாக அளிக்க இயலாது என்று காரணம் தெரிவித்தது.
இந்நிலையில், ரோஹிங்யா விவகாரம் தொடர்பாக உலக வங்கி நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக வங்கதேச நிதித்துறை செயலர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு தொகை என்பதை இரு தரப்பும் உறுதி செய்யவில்லை.
இதுதொடர்பாக விரைவில் உலக வங்கியின் ஆலோசனைக் குழு வங்கதேசம் பயணிக்க உள்ளது. உலக வங்கியின் விதிப்படி இந்த முழு நிதியுதவியும் ரோஹிங்யா மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.