அலபாமாவைச் சேர்ந்த பள்ளி மாணவி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்க, அவருக்கு பதிலாக பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஐபேட் இணைக்கப்பட்ட ரோபோ கலந்து கொண்டு பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.
சிந்தியா பெட்வே என்ற மாணவி பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினார். எதிர்பாராதவிதமாக பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஒரு வார காலத்துக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில், சிந்தியா பெட்வே, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, அவர் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை ஒரு அற்புதமான யோசனையை அளித்தது.
அதாவது, ஐபேட் இணைக்கப்பட்ட ரோபோவின் உதவியோடு அவர் லைவ்வாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ஒரு ஐபேட் மாணவியின் கையில் இருந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மற்றொரு ஐபேட், சுழலும் சக்கரங்கள் கொண்ட ரோபோவுடன் இணைக்கப்பட்டு பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் நிறுத்தப்பட்டது. அதுவும், பட்டமளிப்புக்கான உடை, தொப்பியுடன்.
சிந்தியாவுடன் படித்த மாணவிகளுடன், அந்த ரோபோ நிறுத்தப்பட்டது. சிந்தியாவின் பெயர் அழைக்கப்பட்டதும், ரோபோவை மருத்துவமனையில் இருந்து மாணவி இயக்கியபடி, ரோபோ பள்ளி முதல்வரிடம் சென்று பட்டங்களை பெற்றக் கொண்டது.
இதன் மூலம், தனது கடும் உழைப்பினால் கிடைத்த பட்டங்களை தானே நேரில் சென்று பெற்றுக் கொண்டது போன்ற உணர்வினை மாணவி பெற்றார். இதனைப் பெறும் போது அவர் கண் கலங்கினார். மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாக இது இருந்தது.