ரஷிய அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்துள்ளார். மே 21-ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் பலமுறை தொலைபேசி வழியாக இரு நாட்டு உறவுகள் குறித்து பேசி வந்தவர்கள் தற்போதுதான் முதன்முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து ரஷியாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண் கூறியதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ரஷியாவில் இன்னும் இருவார காலத்துக்குள் சந்தித்து பேசவுள்ளனர். இதில் இரு நாடுகளின் உறவு குறித்து பேச சரியான தருணமாக அமைந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்னையாக உள்ள பயங்கரவாத ஒழிப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஒழிப்பு, ஆஃப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளில் நிலவும் சூழல், சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அணுசக்தி உற்பத்தி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியாவில் கூடங்குளத்தில் 6 ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் மேலும் பல அணு உலை உற்பத்தி மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்புக்கு பின்னர் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது இவ்விவகாரங்கள் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.