பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட ராவல்பிண்டி நகரில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோயிலை புனரமைக்க அந்நாட்டு அரசு ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அந்நாட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத், அதன் அருகில் உள்ள ராவல்பிண்டி ஆகிய இரு நகரங்களையும் ஒப்பிடுகையில் ஹிந்துக்களின் வழிபாட்டுக்காக இருக்கும் ஒரே கோயில் இந்த கிருஷ்ணர் கோயில் மட்டுமே. இந்தக் கோயிலில் காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் பூஜை நடத்தப்படுகிறது.
ராவல்பிண்டியில் உள்ள ஹிந்து மக்களும், இஸ்லாமாபாதில் பணியாற்றும் இந்திய தூதரகப் பணியாளர்களும் இந்த கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்சமயம், கிருஷ்ணர் கோயிலில் ஒரே சமயத்தில் 100 பக்தர்கள் வரை மட்டுமே வழிபடும் வகையில் இடவசதி உள்ளது. இதை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஹிந்துக்கள் நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று தற்போது பாகிஸ்தான் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
கிருஷ்ணர் கோயில் அறக்கட்டளையின் துணை நிர்வாக அதிகாரி முகமது ஆசிப் இது தொடர்பாக கூறுகையில், ""கோயில் புனரமைப்புக்காக அரசு ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கோயில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு கூடுதலான மக்கள் வந்து செல்ல முடியும்'' என்றார்.