கியூபாவில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
சுமார் 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அந்த விமானம் குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், அந்த விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இந்தக் கருப்புப் பெட்டிகள் உதவும் என்று கூறப்படுகிறது.
கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹோல்கைன் நகருக்கு அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 107 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் மயக்கம் தெளிந்து பேசியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.