அமெரிக்காவைப் பின்பற்றி, பராகுவேயும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு மாற்றியுள்ளது.
அந்த நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய தூதரகத் திறப்பு விழாவில் பராகுவே அதிபர் ஹொராசியோ கர்டெஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஹொராசியோ கர்டெஸ் பேசியதாவது:
ஜெருசலேமுக்கு பராகுவே தூதரகம் மாற்றப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
இஸ்ரேலுடனான ஆழ்ந்த நட்பையும், அந்த நாட்டுக்கு பராகுவே அளிக்கும் முழுமையான ஆதரவையும் இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது என்றார் கர்டெஸ். பராகுவே தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம் விவசாயம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாகவும், தற்போது டெல்-அவிவ் நகரிலுள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த முடிவு பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று பலர் எச்சரித்தனர். எனினும், திட்டமிட்டபடி அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு கடந்த 14-ஆம் மாற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் எல்லை அருகே தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவைப் பின்பற்றி கெüதமாலாவும் ஜெருசலேம் நகருக்கு தனது தூதரகத்தை கடந்த 16-ஆம் தேதி மாற்றிக் கொண்டது. இந்த நிலையில், 3-ஆவதாக பராகுவேயும் தற்போது ஜெருசலேம் நகரில் தூதரகம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.