சீனாவில் பணியாற்றும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிக்கு மூளைக் காயம் ஏற்பட்டுள்ளதற்கு, அவர் மீது நிகழ்த்தப்பட்ட ஒலியலைத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.
இதையடுத்து, சீனாவிலுள்ள தங்களது தூதரக அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்த நாடு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சீனாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இங்கு பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், மர்மமான ஒலியலைகளைக் கேட்பதாகவும், விவரிக்க முடியாத அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரட்டலை உணர்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கான உண்மையான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
குவான்க்ஷூ நகர துணைத் தூதரகத்தில் பணியாற்றி வந்த ஓர் அதிகாரி, கடந்த ஆண்டின் இறுதி முதல், இந்த ஆண்டின் ஏப்ரல் வரை பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகக் கூறினார்.
இதையடுத்து, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதித்தபோது, அவருக்கு மூளையில் லேசான அதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில், கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மீது ஒலியலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டபோது இதே போன்ற உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால், அதே போன்று சீனாவிலும் தங்களது அதிகாரிகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது.