வெல்லிங்டன்: நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு ஒருலட்சத்து 26 ஆயிரம் பசுக்களை நியூசிலாந்து அரசு கொல்லப் போகும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த உற்பத்தியில் 3% ஆகும். அந்நாட்டில் 66 லட்சம் பால் மாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் அந்நாட்டில் தெற்கு பகுதியில் பசுக்களிடையே பரவும் 'மைக்கோபிளாஸ்மா போவிஸ்' எனப்படும் தொற்று நோய் கண்டறியப்பட்டது.காய்ச்சல், காது சம்பந்தமான பாதிப்புகள் மற்றும் முலை அழற்சி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். நோய்க்கு பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் தடுப்பு நடவடிக்கையாக 26000 பசுக்கள் கொல்லப்பட்டன.
தெற்குப் பகுதியில் மட்டுமே இருக்கிறது என்று கருதப்பட்ட இந்த நோய் பாதிப்பானது தற்பொழுது நியூசிலாந்தின் வடக்குப் பகுதியிலும் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் 'மைக்கோபிளாஸ்மா போவிஸ்' நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு ஒருலட்சத்து 26 ஆயிரம் பசுக்களை நியூசிலாந்து அரசு கொல்லப் போகும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறை என்று கருதப்படும் இந்த ஒட்டுமொத்த அழிப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது மிகவும் கடினமான முடிவு. இத்தகைய ஒட்டு மொத்த பசு ஒழிப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதனை செய்யாவிட்டால் நமது நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், நமது நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.