ஆஸ்திரேலியாவில் சோமாலிய குடியேற்றவாசி வெள்ளிக்கிழமை நடத்திய கத்துக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் சுட்டதில், அவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விக்டோரியா மாகாண காவல்துறை தலைவர் கிரஹம் ஆஷ்டன் கூறியதாவது:
மெல்போர்ன் நகரில், ரùஸல் மற்றும் ஸ்வான்ஸ்டான் தெருக்களுக்கு இடையேயுள்ள போர்கே தெருவுக்கு காரை ஓட்டி வந்த ஒருவர், அந்தக் காரில் தீவைத்துவிட்டு அதிலிருந்து இறங்கினார்.
அதனைத் தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்தார்; இரண்டு பேர் காயமடைந்தனர்.
மேலும், அவரைப் பிடிக்க வந்த போலீஸார் மீதும் அவர் தாக்குதல் நடத்தினார். அதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை சுட்டுப் பிடித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், குண்டுக் காயம் காரணமாக அந்த நபர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்பட்டு, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்களை தற்போது வெளியிட முடியாது.
அந்த நபர், சிறு சிறு குற்றங்களுக்காக ஏற்கெனவே போலீஸாரால் அறியப்பட்டவர் என்றார் அவர்.
ஐ.எஸ். பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான "அமாக்' தெரிவித்துள்ளதாவது:
இராக் மற்றும் சிரியாவில் எங்கள் அமைப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்கக் கூட்டுப் படையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவிட்டிருந்தோம்.
அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், எங்களது அமைப்பைச் சேர்ந்தவர் மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபரின் கார் பற்றி எரிவது, தன்னைப் பிடிக்க வந்த போலீஸார் மீது அந்த நபர் கத்தியால் குத்த முயற்சிப்பது, அவரைப் பிடிக்க போலீஸார் சுடுவது ஆகிய விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பிரதமர் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தாங்கள் அடிபணிந்துவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.