அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளி அமெரிக்கரும், பேராசிரியருமான சுரேஷ் வி. கேரிமெல்லாவை நியமிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டியு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி வரும் கேரிமெல்லா, தேசிய அறிவியல் அறக்கட்டளையின் ஆராய்ச்சி மையத்தில், குளிரூட்டுதல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். அவர், கடந்த 1985-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடியில் பி.டெக். பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் கேரிமெல்லா, 2024 மே 10-ஆம் தேதி வரையிலான 6 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரிமெல்லாவுடன் சேர்த்து, மொத்தம் 7 பேர் அந்த வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர்.