கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 8-ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அந்தப் பகுதியில் மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று தொடர்ச்சியாக வீசியதில், சில மணி நேரத்தில் அந்த காட்டுத்தீயானது 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை எரித்து சாம்பலாக்கி விட்டது.
இதுவரை இந்தத் தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அழிந்து விட்டன. அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
இதுவரை இந்த காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 35 பேர்களைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளது.
கலிபோர்னியா மாகாண வரலாற்றிலேயே மிகப் பெரும் அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயாக இது அமையும் என்று அந்த பிரதேசத்துக்கான ஷெரீப் கோரி ஹோனியா தெரிவித்துள்ளார்.