ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கத்தித் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்களை விக்டோரியா மாகாண போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஹஸன் காலிஃப் ஷைர் அலி ஆகும்.
அவர், சோமாலியா நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர் ஆவார். அவர், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக, ஹஸன் காலிஃபின் இரு வீடுகளில் சோதனை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹஸனின் மனைவியிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
மெல்போர்ன் நகரில், ரùஸல் மற்றும் ஸ்வான்ஸ்டான் தெருக்களுக்கு இடையேயுள்ள போர்கே தெருவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காரை ஓட்டி வந்த ஹஸன் காலிஃப், அந்தக் காரில் தீவைத்துவிட்டு அதிலிருந்து இறங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்தார்; இரண்டு பேர் காயமடைந்தனர்.
மேலும், அவரைப் பிடிக்க வந்த போலீஸார் மீதும் அவர் தாக்குதல் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஹஸனை போலீஸார் சுட்டுப் பிடித்து, மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குண்டுக் காயம் காரணமாக அந்த நபர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்பட்டு, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்கக் கூட்டுப்படை உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தங்களது உத்தரவை நிறைவேற்றும் வகையில், ஹஸன் காலிஃப் தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான "அமாக்' தெரிவித்துள்ளது.