முதல் உலகப் போர் நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அதற்கான நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
1914-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1918-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் 1918 நவம்பர் 11-ஆம் தேதி - நேசப் படைகளுக்கும், ஜெர்மனிக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாக முதல் உலகப் போரின் குண்டுச் சத்தங்கள் ஓய்ந்தன. ஆனால், இந்தப் போரில் லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
முதல் உலகப் போர் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (நவ.11) 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1918 போர் நூற்றாண்டு நினைவுதின சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு (உள்ளூர் நேரம்) தொடங்கிய நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது, கடந்த கால நிகழ்வுகளிலிருந்து கிடைத்த பாடத்தை உலக தலைவர்கள் மறந்து விடக்கூடாது. உலகம் முழுவதும் அமைதிக்கான நம்பிக்கைகள் துளிர்க்க வேண்டும். ஆனால், அதை சீர்குலைக்கும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் உள்ளன. வருங்கால தலைமுறையினருக்கு சரியானதை தேர்ந்தெடுத்து தருவது நம்முடைய பொறுப்பு.
உலகின் பல நாடுகள் தற்போது தேசிய வாத கொள்கையை கடைபிடித்து வருகின்றன. தேசப்பற்று என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. பருவநிலை மாற்றம், வறுமை, பசி, பிணி, ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, வன்முறை, மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார் அவர்.