இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நிலம்பர் ஆச்சார்யா பெயரை அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவுக்கான நேபாள தூதராக இருந்த தீப் குமார் உபாத்யாய, அரசியலில் இணையும் காரணத்துக்காக பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து ஓராண்டு காலமாக அந்த பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த பதவிக்கு ஆச்சார்யாவின் பெயரை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பரிந்துரைக்கு நாடாளுமன்ற குழு முதலில் ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பின்னர் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சக ஒப்புதல் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சக ஒப்புதல் ஆகியவை பெறப்படும். இறுதியாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தூதர் நியமனம் உறுதி செய்யப்படும்.
ரஷியாவின் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆச்சார்யா, 1990-களில் சட்டம், தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். இலங்கைக்கான தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார். முன்னதாக, முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் நீலகந்தா உப்ரெடியை இந்தியாவுக்கான தூதராக அரசு பரிந்துரைத்திருந்தது. அந்த பரிந்துரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதால் அந்த முடிவை அரசு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.