சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த, அதன் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில், சவூதி அரேபிய எரிசக்தித் துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி கூறியதாவது:
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரலாகக் குறைக்க வேண்டும் என்று எங்களது தொழில்நுட்ப ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கச்சா எண்ணெய்ச் சந்தையை மறுபடியும் சமநிலைக்குக் கொண்டு வருவதற்காக, அடுத்த மாதத்துக்குள் நாளொன்றுக்கு 5 லட்சம் பேரலாக எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.